தமிழக ஆளுநராக 5 ஆண்டுகள் பணியாற்றிய ரோசய்யாவின் பதவிகாலம் கடந்த ஆண்டு ஆகஸ்டு 30-ந்தேதி முடிவடைந்தது. இதையடுத்து மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்து வரும் வித்யாசாகர் ராவ் தமிழகத்துக்கு பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து தமிழகத்துக்கு முழு நேர ஆளுநரை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மதியம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு அரசு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சபாநாயகர் தனபால், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி. ராஜேந்திரன், கமிஷனர் விஸ்வநாதன் ஆகியோர் சால்வைகள் அணிவித்தும் பூங்கொத்துகள் வழங்கியும் புதிய ஆளுநரை வரவேற்றனர்.
ஆளுநர் வருகையின்போது, சென்னை விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தது.