இந்தியாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா, தனது பயணத்தின் ஒரு பகுதியாக நாளை ஐதராபாத்துக்கு செல்கிறார்.
நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா 5 நாள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்துள்ளார். அவருடன், 4 அமைச்சர்களும், 12 சட்ட உறுப்பினர்கள் கொண்ட குழுவும் வந்துள்ளது. நேபாள பிரதமருக்கு ஜனாதிபதி மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய பிரதமர் மோடியை இன்று தியூபா சந்தித்து பேசினார். இருநாடுகளிடையேயான மின்வழிப் பாதைகளை இருநாட்டு பிரதமர்களும் கூட்டாக தொடங்கி வைத்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, இரு நாடுகளிடையே எட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது என தெரிவித்தார். அதை தொடர்ந்து, செய்தியாளர்களிடையே பேசிய நேபாள பிரதமர், அந்நாட்டில் தொழில் தொடங்க இந்திய தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், டெல்லியில் அரசுப் பணிகளை முடித்துக்கொண்டு நேபாள பிரதமர் தியூபா நாளை ஐதராபாத் செல்கிறார்.
அங்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் கேம்பஸ் செல்லும் தியூமா, அதை தொடர்ந்து, தெலுங்கானாவில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் கலந்து கொள்கிறார். மேலும், தெலுங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேசம் மாநில கவர்னர் நரசிம்மனுடன் இரவு உணவு சாப்பிடுகிறார்.
அதை தொடர்ந்து, ஆகஸ்ட் 26-ஆம் தேதி சிறப்பு விமானத்தில் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.