மோடி-ஒலி 
செய்திகள்

பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்திய சுதந்திரதின வாழ்த்து தெரிவித்த நேபாள பிரதமர் ஒலி

நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்திய சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

புதுடெல்லி:

இந்தியாவின் 74-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு நாட்டு தலைவர்களும் இந்தியாவுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலியும் இந்திய சுதந்திர தினத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நேபாள பிரதமர் ஒலி தங்கள் நாட்டின் சார்பாக இந்தியா மக்களுக்கும், அரசுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தரமற்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் ஒலி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். 

சுதந்திர வாழ்த்து தெரிவித்த நேபாள பிரதமர் ஒலிக்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி நன்றி தெரிவித்துக்கொண்டார். மேலும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இரு நாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்பை வழங்க ஆதரவு தெரிவித்துக்கொண்டனர். மேலும், கொரோனா தொடர்பாக நேபாளத்திற்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு தரும் என பிரதமர் மோடி நேபாள பிரதமர் ஒலியிடம் உறுதியளித்தார். இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், எல்லை விவகாரத்தில் இந்தியா-நேபாளம் இடையே கடந்த சில வாரங்களாக கருத்து மோதல்கள் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT