செய்திகள்

நீட் தேர்வை எதிர்த்து போராட்டம்: வைகோ உள்பட 300 பேர் கைது

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க கோரி ம.தி.முக. மாணவரணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வைகோ உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாலை மலர்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க கோரி ம.தி.முக. மாணவரணி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி தராததால் தடையை மீறி இன்று வைகோ தலைமையில் போராட்டம் நடந்தது.

சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் திரண்ட ம.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் மத்திய அரசை கண்டித்து வைகோ கோ‌ஷங்களை எழுப்பினார்.

போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றபோது அருகில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிட வைகோ சென்றார். போலீசார் அவர்களை அலுவலகத்திற்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தினர்.

அங்கு அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு வேலிமூலம் முற்றுகையிடுவது தடுக்கப்பட்டது. இதற்கிடையே ‘நீட்’ அரக்கன் என்ற பெயரில் உருவ பொம்மை தயார் செய்து கொண்டு வந்து ம.தி.முக. தொண்டர்கள் எரித்தனர்.

போலீசாரின் தடையை மீறி நடந்த போராட்டத்தில் வைகோ, மல்லை சத்யா, மணவை தமிழ்செல்வன், செங்குட்டுவன், ஜீவன், ராமதாஸ், முசாத்புகாரி, கழக குமார், தென்றல் நிசார் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டம் குறித்து வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் நீட் தேர்வை கொண்டு வருவதற்கு மத்திய அரசுக்கு தகுதி இல்லை. உரிமையும் கிடையாது. தமிழக உரிமைகளை மத்திய அரசு நசுக்க பார்க்கிறது. தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் உலகப்புகழ் வாய்ந்த மருத்துவர்களாக உள்ளனர்.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 2 சதவீதம் பேர் படிக்கின்றனர். மீதமுள்ளவர்கள் மாநில பாடத்திட்டத்தில் படிக்கிறார்கள். ஆனால் மத்திய அரசு தனது நிலைபாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்.

நீட் தேர்வு முறையால் வசதி படைத்தவர்கள் மட்டுமே மருத்துவர் ஆக முடியும். ஏழை-எளிய மாணவர்களுக்கு அது எட்டாக் கனியாக மாறிவிடும். சுகாதாரத்துறை அமைச்சர் இந்த பிரச்சினையில் 2 நாட்களில் முடிவு தெரிந்து விடும் என்று கூறுகிறார்.

ஜனாதிபதி தேர்தலின் போது மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். காவிரி, முல்லை பெரியாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தீர்த்தால்தான் ஆதரவு தருவோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அப்படி அழுத்தம் கொடுக்கவில்லை.

மத்திய அரசின் மிரட்டலுக்கு மாநில அரசு பணிந்து விடக்கூடாது. மாணவர்கள் ஒன்றுசேர்ந்து வீதிக்குவந்து போராட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.