அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கோங்குடியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிசேகம் நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று கோவில் அருகே உள்ள பழமையான வேப்பமரத்தில் இருந்து பால் வடிந்துள்ளது. உடனே அப்பகுதியில் இருந்தவர்கள் மரத்தில் இருந்து வடிந்த பாலை கழுவி துடைத்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து பால் வடிந்துக்கொண்டே இருந்தது.
வேப்பமரத்தில் இருந்து பால் வடிவது குறித்த தகவல் அப்பகுதியில் பரவியதை அடுத்து ஏராளமான பொதுமக்கள் கோவிலுக்கு வந்து பால் வடியும் வேப்பமரத்தை ஆச்சர்யத்துடன் பார்த்தனர். பின்னர் அந்த மரத்திற்கு புடவை கட்டியும், குங்குமம், சந்தனம் வைத்தும் வழிபட்டனர்.
அறந்தாங்கி அருகே வேப்பமரத்தில் பால் வடியும் தகவலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.