கைது 
செய்திகள்

நீலாங்கரையில் துப்பாக்கி முனையில் கொள்ளையன் கைது

நீலாங்கரையில் துப்பாக்கி முனையில் கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சோழிங்கநல்லூர்:

சிவகங்கையை சேர்ந்தவர் கணேஷ்குமார். இவரது நண்பர் முத்துச்செல்வன். இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை. இருவரும் என்ஜினீயர்கள்.

கடந்த 3-ந் தேதி இரண்டு பேரும் பள்ளிக்கரணையில் நடந்து வரும் கட்டிட பணியை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

பாலவாக்கம் அருகே சென்ற போது மர்ம கும்பல் அவர்களை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி செல்போன்கள் மற்றும் பணத்தை பறித்தனர். இதனை தடுக்க முயன்ற முத்துச்செல்வனின் கையில் கத்தி வெட்டும விழுந்தது.

இதுகுறித்து நீலாங்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

வழிப்பறியில் ஈடுபட்டது பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடைய கோபி என்கிற கோபாலகிருஷ்ணன் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் அக்கரை டோல்கேட் அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று அவனை துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்தனர்.

அப்போது கோபி தப்பிப்பதற்காக அருகில் உள்ள பாலத்தில் தாவி குதித்தார். இதில் அவரது கை முறிந்தது. இதையடுத்து கோபியை போலீசார் கைது செய்தனர். அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அவரிடம் இருந்து 2 பட்டா கத்திகள், மோட்டார் சைக்கிள், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அவரது கூட்டாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.