செய்திகள்

சியரா லியோன்: நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 400 ஆக உயர்வு

சியரா லியோனில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது.

மாலை மலர்

ஆப்பிரிக்க நாடான சியரா லியோன் நாட்டில் பெய்து வந்த பலத்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தலைநகர் பிரிடவுன் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.

அங்குள்ள ரெஜன்ட் பகுதியில் கடந்த திங்கட்கிழமை பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்து விட்டது. எங்கு பார்த்தாலும் பிணக்குவியல்கள் என்ற பரிதாப நிலை, அங்கு உள்ளது.

இன்னும் 600 பேரை காணவில்லை. இடிபாடுகளுக்கு இடையே அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

அந்த நாட்டின் அதிபர் எர்னஸ்ட் பாய் கொரோமா, ஒட்டுமொத்த சமூகமும் அழிந்து விட்டது என மிகுந்த வேதனையுடன் கூறினார். உலக நாடுகளின் அவசர உதவியை அவர் கோரி உள்ளார்.

அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் அப்துலாய் பாராய்டாய், பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில், “இடிபாடுகளுக்குள் இன்னும் பலரது உடல்கள் சிக்கியுள்ளன. அவற்றை மீட்டெடுக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. ஒட்டுமொத்த நாடும் இப்போது துயரத்தில் உள்ளது” என்று கூறினார்.