செய்திகள்

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய கோரப் புயலுக்கு சுமார் 100 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியை சூறையாடிய கோரப் புயலால் ஏற்பட்ட பெருமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 100 பேர் உயிரிழந்தனர்.

மாலை மலர்

மணிலா:

ஆண்டுதோறும் சுமார் 20 புயல்களை எதிர்கொண்டு வரும் பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியை நேற்று பிற்பகல் சக்தி வாய்ந்த வெப்பமண்டல புயல் தாக்கியது. 

டெம்பின் என பெயரிடப்பட்ட நேற்றைய புயல் மிண்டானாவ் தீவை துவம்சம் செய்தது. மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்றுடன் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பல கிராமங்கள் நீரில் மூழ்கின. தாழ்வான பகுதியில் குடியிருந்த சுமார் 12 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்ததால் சில கிராமங்களில் கரை புரண்டு ஓடிய வெள்ள நீரில் வீடுகள் அடித்து செல்லப்பட்டன. 

டெல் நார்ட்டே மாகாணத்தில் உள்ள சிபுகோ சலுக் நகரங்களில் முப்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். இன்று பிற்பகல் நிலவரப்படி சுமார் 100 பிரேதங்கள் மீட்கப்பட்டதாக பேரிடர் மீட்பு மற்றும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் பிலிப்பைன்ஸ் நாட்டை பதம் பார்த்த மற்றொரு புயலுக்கு 46 பேர் பலியான நிலையில் தற்போது மேலும் ஒரு புயல் அந்நாட்டை தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.