செய்திகள்

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல் ஒருவர் பலி

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் இரு பேருந்துகளுக்கு நக்சலைட்டுகள் தீவைத்து கொளுத்திய வன்முறையில் ஒருவர் கொல்லப்பட்டார். #Chhattisgarh #Sukma #Naxalstorchbuses

மாலை மலர்

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. அங்குள்ள காடுகளுக்குள் பதுங்கியிருக்கும் நக்சல்கள் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அவர்களை பிடிக்கும் முயற்சியில் மாநில போலீசாரும், மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். போலீசார் மற்றும் நக்சல்கள் இடையேயான சண்டையில் இருதரப்பினரும் உயிரிழந்து வருகின்றனர். அதோடு சில சமயங்களில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர்.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜகதல்பூர் மற்றும் ஒடிசா மாநிலத்தின் மல்கன்கிரி பகுதியில் இருந்து இரண்டு பேருந்துகள் நேற்றிரவு ஐதரபாத் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தன. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் டோர்னாபால் காவல்நிலையத்துக்கு உட்பட்ட பெடாகுட்தி, பெண்டா கிராமங்களுக்கு இடைபட்ட சாலையில் அந்த இரு பேருந்துகளையும் நக்சலைட்டு கும்பல் தடுத்து நிறுத்தியுள்ளது.

அந்த பேருந்தில் இருந்தவர்களை கீழே இறங்குமாறு கூறிய நக்சல்கள் இறங்க மறுத்தவர்களை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த இரு பேருந்துகளுக்கு தீவைத்து கொளுத்திய நக்சல்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை தீயை அணைத்தனர். அதோடு மரணமடைந்தவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த வழியாக சென்ற மேலும் ஒரு டிரக்கிற்கும் தீவைத்து கொளுத்தியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். #Chhattisgarh #Sukma #Naxalstorchbuses