செய்திகள்

‘பனாமா கேட்’ ஊழல் வழக்கு - நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் மறுஆய்வு மனு தாக்கல்

‘பனாமா கேட்’ ஊழல் வழக்கு தொடர்பாக நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இஸ்லாமாபாத்:

‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் கடந்த மாதம் 28-ந் தேதி, அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நவாஸ் ஷெரீப், அவரது மகன்கள் உசேன் நவாஸ், ஹசன் நவாஸ், மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் சப்தார் ஆகியோர் மீது தேசிய பொறுப்புடைமை முகமை வழக்கு பதிவு செய்து, அந்த வழக்கின் விசாரணையை தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.இந்த நிலையில், நவாஸ் ஷெரீப் மகன்கள் உசேன் நவாஸ், ஹசன் நவாஸ், மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் சப்தார் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்தனர். அவர்கள் 2 மனுக்களை தாக்கல் செய்தனர்.

ஒரு மனு, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்தும், மற்றொரு மனு, தங்கள் மீது எழுந்துள்ள லண்டனில் சொகுசு பங்களாக்கள் வாங்கிய குற்றச்சாட்டு உள்ளிட்டவற்றில் தொடர்புடைய வழக்குகளில் விசாரணை நடத்துமாறு தேசிய பொறுப்புடைமை முகமைக்கு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மறு ஆய்வு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டு விரைவில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

SCROLL FOR NEXT