செய்திகள்

கோவா விமான நிலையத்தில் போர் விமானம் தீப்பற்றி எரிந்தது - விமானி உயிர் தப்பினார்

கோவா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட போர் விமானம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விமானத்தில் இருந்த பைலட் கீழே குதித்து சாதுரியமாக உயிர் தப்பினார்.

மாலை மலர்

பனாஜி:

கோவா தலைநகர் பனாஜியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள டபோலிம் என்ற இடத்தில் கடற்படையின் ஐ.என்.எஸ். ஹன்சா விமானப் படைத் தளம் அமைந்துள்ளது.

இந்த விமானப் படைத்தளத்தில் உள்ள பயணிகள் விமான நிலையத்தில் இருந்து இன்று காலை மிக்-29கே ரக விமானத்தை ஓடுதளத்தில் பயிற்சி விமானி ஓட்டிச் சென்றார். விமானம் ஓடுபாதையில் ஓடி உயரே கிளம்பியபோது, திடீரென ஓடுபாதையைவிட்டு விலகிச் சென்று தரையில் மோதியது. மோதிய வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. 

இதைக்கண்ட விமானி சாதுரியமாக செயல்பட்டு உடனடியாக விமானத்தில் கீழே குதித்து உயிர் தப்பினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் விமானத்தில் பிடித்த தீயை அணைத்தனர்.

இந்த விபத்து காரணமாக கோவா விமான நிலையம் சிறிது நேரம் மூடப்பட்டது. இதனால் கோவாவுக்கு வரவிருந்த சில விமானங்கள் தாமதமாக வந்து சென்றன.

#tamilnews #goaaiport #mig21