சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரை ஐகோர்ட்டு கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கில் நவோதயா பள்ளிகளுக்கான தடையில்லா சான்றை 8 வாரங்களுக்குள் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன்.
கிராமப்புறத்தில் தரமான, நவீன கல்வி வசதியில்லாத சூழலில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்படுவது மிகமிக அவசியமாகும். இந்த பள்ளியில் மாவட்டத்திற்கு 100 மாணவர்கள் தான் சேர்க்கப்படுகிறார்கள். இதில் சேர வேண்டும் என்பது கட்டாயமல்ல. விருப்பப்பட்டவர்கள் நவோதயா பள்ளிகளில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பை தமிழக அரசு உருவாக்க வேண்டும். இத்தகைய வாய்ப்பை மறுக்காமல் மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி நவோதயா பள்ளிகளை உடனடியாக தொடங்குவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.