பெரம்பலூரில் உள்ள ஒரு வீட்டில் கொலு அமைத்து பெண்கள் வழிபாடு நடத்தியதை காணலாம் 
செய்திகள்

பெரம்பலூரில் நவராத்திரி விழா- வீடுகளில் கொலு வைத்து பக்தர்கள் வழிபாடு

பெரம்பலூரில் நவராத்திரி விழாவையொட்டி வீடுகளில் கொலு வைத்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பெரம்பலூர்:

ஒன்பது நாட்கள் அம்மனை நினைத்து மிகவும் விசேஷமாக கொண்டாடப்படக்கூடிய விழா நவராத்திரி. நவராத்திரி விழாவையொட்டி 9 நாட்களும் பெண் பக்தர்கள் விரதம் இருந்து பூஜை செய்வார்கள். இந்த வருடத்திற்கான நவராத்திரி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. நவராத்திரியின் சிறப்பம்சங்களில் ஒன்று வீடு மற்றும் கோவில்களில் கொலு அமைப்பது. தற்போது கொரோனாவினால் பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நவராத்திரி விழாவிற்கு கொலு மேடை அமைத்து, பூஜைகள் நடத்த அரசு தடைவிதித்துள்ளது.

இதனால் கோவில்களில் சிறப்பு வழிபாடு மட்டும் நடத்தப்படுகிறது. இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்தனர். மேலும் பெரம்பலூரில் பல வீடுகளில் நவராத்திரி கொலு மேடை அமைக்கப்பட்டு, அதில் ஒவ்வொரு படியிலும் வெவ்வேறு வகையான பொருட்கள், களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகளை இடம்பெற செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

இதேபோல் பெரம்பலூர் துறைமங்கலம் 10-வது வார்டு நியூ காலனியில் உள்ள ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் அம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர். கோவில்களில் நேற்று 2-வது நாளாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.