மாலத்தீவில் இருந்து இந்தியர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட கடற்படை கப்பல் ‘ஐ.என்.எஸ். ஐராவத்’தை படத்தில் காணலாம். 
செய்திகள்

மாலத்தீவில் தவித்த 250 இந்தியர்களுடன் கடற்படை கப்பல் தூத்துக்குடிக்கு நாளை வருகை

மாலத்தீவில் தவித்த 250 இந்தியர்கள் கடற்படை கப்பலில் நாளை (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடிக்கு வருகின்றனர்.

மாலை மலர்

தூத்துக்குடி:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வெளிநாடுகளில் பணியாற்றி வந்தவர்கள், சுற்றுலா சென்றவர்கள் என பல்வேறு தரப்பினரும் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இவர்களை ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் விமானம் மற்றும் கடற்படை கப்பல்கள் மூலம் மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

அதன்படி ஏற்கனவே இந்திய கடற்படை கப்பல் ‘ஐ.என்.எஸ். ஜலஸ்வா‘ மூலம் இலங்கை, மாலத்தீவில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டு, தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக ‘ஆபரேசன் சமுத்திர சேது’ திட்டத்தில் ஈரானில் தவித்து வரும் இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மாலத்தீவில் தவித்து வந்த இந்தியர்கள் 250 பேரை ‘ஐ.என்.எஸ். ஐராவத்‘ கப்பல் மூலம் மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி இந்த கப்பல் மாலத்தீவில் இருந்து 250 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று மதியம் புறப்பட்டது. இந்த கப்பல் நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் தூத்துக்குடியை வந்தடைகிறது. தொடர்ந்து காலை 7 மணிக்கு கப்பல் வ.உ.சி. துறைமுகத்தில் உள்ள கரித்தளத்தில் நிறுத்தப்படுகிறது.

பின்னர் அங்கு 250 பயணிகளும் இறக்கி விடப்படுகின்றனர். தொடர்ந்து அவர்களுக்கு உரிய பரிசோதனைகள் நடத்தப்பட்டு, சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.