சுதந்திரம் என்பது ஒருவர் விரும்பியதைச் செய்வதற்கான உரிமை மட்டுமல்ல என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறினார்.
மேலும், லோக்மான்ய திலகரின் தொலைநோக்குப் பார்வையையும், தேசத்தைக் கட்டமைப்பதில் அவரது பங்களிப்பையும் இளம் தலைமுறையினர் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மகாராஸ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற லோக்மான்ய திலக் தேசிய விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்த ஆண்டுக்கான லோக்மான்யா திலக் விருதை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பெற்றார்.
அப்போது அவர் கூறுகையில், “லோக்மான்ய திலகரின் வாழ்க்கையையும், அவரது ஆளுமையின் ஆழத்தையும் உண்மையாகப் புரிந்துகொள்ள, அந்தக் காலகட்டத்தின் சூழலையும், கட்டுப்பாடுகளையும், அவலமான நிலைமைகளையும் ஒருவர் அறிந்துகொள்ள வேண்டும்.
ஒருவேளை நாமும், குறிப்பாக இளைஞர்களும், முழுமையாகக் கற்பனை செய்து பார்க்க போராடும் யதார்த்தங்கள் தான் இவை.
ஒவ்வொரு இந்தியரும், குறிப்பாக நமது இளைஞர்கள், அவருடைய வார்த்தைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
இந்தியாவுக்காக அவர் கொண்டிருந்த தொலைநோக்குப் பார்வையையும், அவர் தன்னகத்தே கொண்டிருந்த தேசத்தை கட்டியெழுப்பும் உணர்வையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இன்றைய இளைஞர்கள், இந்தியா எப்போதுமே இப்படித்தான் இருந்து வந்திருக்கிறது என்று நினைக்கலாம், அல்லது ஒருவர் விரும்பியதைச் செய்வதற்கான வெறும் சுதந்திரத்தையே அவர்கள் விடுதலை எனத் தவறாகப் புரிந்துகொள்ளலாம். ஆனால், சுதந்திரத்தின் உண்மையான அர்த்தம் அதுவல்ல.
இன்றைய இளைஞர்கள் தங்களை முழுமையாக நாட்டிற்காக அர்ப்பணிக்க வேண்டும். தனிப்பட்ட அல்லது குறுகிய நலன்களை ஒதுக்கி வைத்துவிட்டு, எப்போதும் தேசிய நலனுக்காகவே உழைப்போம் என்று அவர்கள் உறுதியெடுக்க வேண்டும்.
இத்தகைய நலன்கள் எழுந்தாலும், அவற்றை அவர்கள் புறக்கணிக்க வேண்டும். அந்த விஷயங்கள் இப்போதைக்குக் காத்திருக்கலாம்; தேசத்தைக் கட்டியெழுப்புவதே முன்னுரிமை.
நமது நாட்டின் வரலாற்றில் ஒரு அரிய வாய்ப்பு காலம் வந்துள்ளது, அதை நாம் நழுவ விடக்கூடாது. இந்த பணியில் நாம் வெற்றி பெற்று, வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத் உருவாக்குவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.