கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டம் அரியலூர் வல்லிகுன்னு பகுதியை சேர்ந்தவர் நிதின் மோகன்தாஸ் (வயது25). இவர் சமூக வலைதள பக்கங்களில் இருந்து இளம்பெண்களின் புகைப்படத்தை எடுத்து, அவற்றை ஆபாசமாக சித்தரித்து இருக்கிறார்.
அவ்வாறு ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட இளம்பெண்களின் புகைப்படத்தை “டெலிகிராம்” உள்ளிட்டவற்றில் ஆன்லைன் குழுக்களில் விற்பனை செய்திருக்கிறார். அதில் ஒரு குழுவில் தனது பெண் நண்பரின் புகைப்படம் பரவுவதை வாலிபர் ஒருவர் பார்த்தார்.
அவர் அது குறித்து தன்னுடைய பெண் நண்பரிடம் தெரிவித்தார். கோழிக்கோடு மாவட்டம் ராமனாட்டுக்கரை பகுதியை சேர்ந்த அந்த இளம்பெண், அதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் பரப்பனங்காடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அப்போது வாலிபர் நிதின் மோகன்தாசின் அட்டூழியங்கள் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து போலீசார் சோதனை செய்து பார்த்தனர்.
அப்போது அதில் ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட இளம்பெண்களின் புகைப்படங்கள் ஏராளமாக இருந்தன. அதேபோல் வாலிபர் நிதினின் வீட்டில் சோதனை நடத்திய போது, மற்றொரு செல்போனும் சிக்கியது. அதிலும் ஏராளமான இளம்பெண்களின் சித்தரிக்கப்பட்ட ஆபாச படங்கள் இருந்தன. இந்த படங்களை ஆன்லைன் குழுக்களில் விற்றதன் மூலம் நிதின் மோகன்தாஸ் ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதித்து இருக்கிறார்.
குழுவில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு புதுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக பல பெண்களின் புகைப்படங்களை அவர்களுக்கு தெரியாமலேயே சமூக வலைதள பக்கங்களில் இருந்து எடுத்து ஆபாசமாக சித்தரித்து விற்பனை செய்திருக்கிறார்.
வாடிக்கையாளர்களுக்கு விற்பதற்காக 5 வயது சிறுமியின் புகைப்படத்தை கூட ஆபாசமாக சித்தரித்து ஆன்லைன் குழுக்களில் விற்பனை செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. வாலிபர் நிதின் மோகன்தாஸ் மீது மலப்புரம் மாவட்டம் தனூர் போலீஸ் நிலையம் மற்றும் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட மாஹே போலீஸ் நிலையம் ஆகியவற்றில் இது போன்ற புகார்கள் ஏற்கனவே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.