பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத், ஜென் Z போராட்டக்காரர்கள் குறித்த தனது கருத்துக்களை விமர்சித்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸுக்கு பதிலடி கொத்துள்ளார்.
இதுகுறித்து கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், செளரவ் தாஸ் என்ற மாணவரின் அடையாளத்தைக் கேள்விக்கு உட்படுத்தி, அவரது சாதனைகளை தனது இத்தனை ஆண்டு வெற்றிகளோடு ஒப்பிட்டு பதிலளித்துள்ளார்.
கங்கனா வெளியிட்ட பதிவில், “இந்த நபரை கூகுளில் தேடிப் பார்த்தேன். அவருக்கு 28 வயது, அவர் எப்படி தன்னை ஒரு மாணவர் என்று கூறிக்கொள்கிறார் என்றே எனக்குத் தெரியவில்லை.
நான் இரண்டு ஆண்டுகளாக அரசியலில் இருந்தாலும், கடந்த 20 ஆண்டுகளாக பொது வாழ்வில் தான் இருந்து வருகிறேன்.
ஒரு புதிய நாடாளுமன்ற உறுப்பினராக எனக்குக் கிடைத்த அத்தனை பணிகளாலும் நான் சற்று தடுமாறினேன்.
ஏனென்றால் நான் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர், கலைஞர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தொழில்முனைவோர் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வந்தேன்.
இந்த 28 வயதில் நான் இரண்டு தேசிய விருதுகளை வாங்கினேன். ஆனால், அவரைப் போன்ற முற்றிலும் பயனற்ற, வேலையில்லாத ஒருவரால், எந்த வயதிலும், எல்லா நேரங்களிலும் பெரும் தேவை இருப்பதன் அர்த்தத்தை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது.
அன்புள்ள சௌரவ், உங்கள் பிரச்சினைகள் தனிப்பட்டவை, நீங்கள் ஒரு மாணவர் அல்ல. முற்றிலும் பயனற்றவர், வாருங்கள் ஏதாவது ஒரு திறமையைக் கற்றுக்கொள்வதில் இருந்து தொடங்குவோம். அது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்” என்று கங்கனா தெரிவித்தார்.
நீட்-யூஜி தேர்வு குறித்து எழுந்த சர்ச்சையில், தர்மேந்திர பிரதானின் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, மத்திய அரசின் நடவடிக்கைக்கு கங்கனா ஆதரவு தெரிவித்தார்.
அரசின் கல்வி சீர்த்திருத்தங்களையும், தேர்வு முறையை வலுப்படுத்தும் நோக்கில் குழு அமைக்கப்பட்டதையும் அவர் பாராட்டினார்.
மேலும் அவர் நீட் தேர்விற்கு எதிராக போராடிய இளைய தலைமுறையினர் மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோர்களை ‘சாக்கடைத் தலைமுறை’ என்றும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இதையடுத்து கங்கனா குறித்து செளரவ் தாஸ் கூறுகையில், “ஜென் Z, ஜென் ஆல்ஃபா அல்லது இளைய தலைமுறையினர், கங்கனாவின் கருத்துக்களைப் பெரிதாக எடுத்துக்கொண்டதாகத் தாம் நம்பவில்லை.
பொது வாழ்வில் இருக்கும் நபர்கள் தங்கள் மொழியில் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று கூறினார்.