யோகி ஆதித்யநாத் யோகி ஆதித்யநாத்
இந்தியா

அகிலேஷ் யாதவ் மகள் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு: யோகி ஆதித்யநாத் கடும் கண்டனம்- FIR பதிவு செய்ய உத்தரவு

மகள்களுக்கு எதிரான கருத்துகள் ஏற்றுக் கொள்ள முடியாதது. மன்னிக்க முடியாதவை என்று யோகி ஆதித்யநாத் தனது கண்டனைத் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு நடைபெற்று வருகிறது. சமாஜ்வாடி கட்சி எதிர்க்கட்சியாக இருந்து வருகிறது. அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன் வைத்து அரசியல் செய்து வருகிறது.

யோகி ஆதித்யநாத் கண்னடம்

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் அகிலேஷ் யாதவின் மகள் போட்டோவை ஏ.ஐ. மூலம் சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவு செய்து அவதூறு செய்யப்பட்டது. இதற்கு சமாஜ்வாடி கட்சி கடும் ஆட்சேபனை தெரிவித்து, குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து உத்தர பிரதேச மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவ் மகளுக்கு எதிராக அவதூறு பரப்புவதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். மேலும், FIR பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அசாம்கார்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யோகி ஆதித்யநாத் இது தொடர்பாக பேசியதாவது:-

மகள்களுக்கு எதிரான கருத்துகள் ஏற்றுக் கொள்ள முடியாதது. மன்னிக்க முடியாதவை. அகிலேஷ் யாதவ் மகளுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்துகள் பதிவிட்டு வருவதை நான் சமீபத்தில் பார்த்தேன். இது தொடர்பாக என் கவனத்திற்கு வந்த உடனேயே, FIR பதிவு செய்த போலீசாருக்கு உத்தரவிட்டேன். மகள் என்றால் மகள் தான். கிராமத்தில் ஒரு மகள் எல்லோருடைய மகளாகவும், ஒரு சகோதரி எல்லோருடைய சகோதரியாகவும் கருதப்பட வேண்டும் என்பதுடன் நாங்கள் வளர்ந்தோம். நாங்கள் ஒருபோதும் எந்த வேறுபாட்டையும் பார்த்ததில்லை.

இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

மேலும், அகிலேஷ் ஜி, நீங்கள் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுகிறீர்கள். ஆனால், உங்கள் ஆதரவாளர்களும் தொண்டர்களும் கண்ணியமான மொழியைப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும். உங்கள் தரப்பினருக்கு நீங்கள்தான் பாடம் புகட்ட வேண்டும். அவர்களுக்கு நீங்கள் புரிய வைப்பது நல்லது. ஒருவேளை அவர்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், அவர்களை எங்களிடம் ஒப்படையுங்கள். நாங்கள் அவர்களுக்குச் சரியாகப் புரிய வைப்போம் என்றார்.