பிரதமர் பதவியில் மோடி 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்தியாவில் தேர்தலில் தேர்வு செய்யப்பட்டு தொடர்ந்து நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற சாதனையை அவர் இன்று படைத்தார். ஜவஹர்லால் நேருவின் சாதனையை அவர் முறியடித்தார்.
இந்தியாவின் நீண்ட கால பிரதமராக பதவி வகித்து சாதனை படைத்த பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இலங்கை அரசின் சார்பிலும், மக்களின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இந்த மைல்கல் சாதனை, நீங்கள் பதவியில் இருந்த ஆண்டுகளின் சான்றாக மட்டுமல்லாமல், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டை சேர்ந்த மக்கள், உங்கள் தலைமை மீது மீண்டும் வைத்துள்ள நம்பிக்கைக்கும் சான்றாகும்.
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை, இலங்கை உள்பட இந்தியாவின் எல்லைகளுக்கு அப்பால் உள்ள பல நாடுகளுக்கும் உத்வேகம் அளித்துள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
பப்புவா நியூ கினியாவின் பிரதமர் ஜேம்ஸ் மாரபே, வெளியிட்டுள்ள காணொலிச் செய்தியில் கூறியிருப்பதாவது:- பிரதமர் மோடி முன்மாதிரியான தலைமைத்துவத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. இப்போது 25 கோடிக்கும் அதிகமான மக்களை மோடி வறுமையில் இருந்து நல்ல வாழ்க்கைக்கு உயர்த்தியிருப்பது ஒரு அற்புதமான சாதனை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டிரினிடாட் டொபாகோ நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்சேசர் கூறியிருப்பதாவது:-
இந்திய பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.அவரது தலைமையின் கீழ் உலக விவகாரங்களில் இந்தியா ஒரு முன்னணி குரலாக உருவெடுத்துள்ளது.
3 பதவிக் காலங்களில் 140 கோடி மக்கள் கொண்ட ஒரு நாட்டை வழிநடத்தினார். வெளியுறவுக் கொள்கை, பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு, சமூக-பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க சாதனைகளையும் படைத்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.