ஆட்டு மந்தைகளைப் போல பணி நீக்கம் செய்யப்படுவதும், தனிப்பட்ட வாழ்க்கையை வாழ முடியாத அளவுக்கு எந்த நேரத்திலும் மீட்டிங், பணிச்சுமை என அலைக்கழிக்கப்படுவதும் கார்ப்பரேட் ஊழியர்கள் நவீன கொத்தடிமைகளாக மாறி வருவதற்காக அறிகுறி என்ற ஒரு கருத்து நிலவுகிறது.
இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் பல சம்பவங்களும் அவ்வப்போது வெளிவருகின்றன.
அந்த வகையில், பிரசவ வலி ஏற்பட்ட மனைவியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, தனக்கு 2 நாட்கள் லீவ் வேண்டும் என தனது நிறுவன மேலாளரிடம் கேட்ட ஊழியருக்கு கிடைத்த பதில் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
மேலாளருடனான வாட்சப் உரையாடல் புகைப்படத்தை பகிர்ந்து Reddit சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட இந்த அனுபவம் விமர்சனங்களை ஏற்ப்படுத்தி வருகிறது
அந்த பதிவின்படி, ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் ஊழியர் பிரசவ வலி ஏற்பட்ட தனது கர்ப்பிணி மனைவியை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு அவரை கவனித்துக்கொள்வதற்காக 2 நாட்கள் தனது நிறுவன மேலாளரிடம் விடுப்பு கேட்டுள்ளார்.
இதற்கு பதியளித்த மேலாளர், 'உங்களுக்கு இப்போது விடுப்பு கொடுக்க முடியாது. அடுத்த வாரம் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் மனைவியின் பிரசவத்திற்கு நீங்கள் என்ன செய்ய முடியும்? வேண்டுமானால் மருத்துவமனையில் இருந்து வேலை செய்ய முடியுமா?' என்று பதிலளித்தார்.
இதற்கு பதிலளித்த ஊழியர்,"அது சாத்தியமில்லை, மருத்துவமனையில் மனைவியை கவனித்துக் கொள்ள வேண்டியவன் நான். மருத்துவக் வாங்க செல்வது போன்ற வேறு வேலைகளும் உள்ளன. மேலும், மருத்துவமனையில் இருந்து அலுவலக வேலைகளைச் செய்வது சாத்தியமில்லை," என்று பதில் கூறியுள்ளார். இதன்பின் மேலாளர் வேண்டா வெறுப்பாக அவருக்கு விடுப்பு வழங்கியுள்ளார். இந்த பதிவு வைரலாகி விமர்சனங்களை குவித்து வருகிறது.