இந்தியா

பணி நெருக்கடி: உத்தரகாண்டில் கியாஸ் நிறுவன மேலாளர் தற்கொலை

பணி முடித்து வீடு திரும்பிய தயால் சிங் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

உத்தரகாண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தை சேர்ந்தவர் தயால் சிங் ராவத் (55). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கியாஸ் நிறுவனத்தின் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் குமா வோன் பகுதியில், சில தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு கியாஸ் சிலிண்டர்களை விநியோகிக்கவில்லை.

இதனால் தயால் சிங் ராவத் தனது நண்பரிடம், அதிகப்படியான வேலை அழுத்தத்தால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் நுகர்வோர் மற்றும் நிர்வாகம் ஆகிய இரு தரப்பினரிடமிருந்தும் நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் வேதனையுடன் கூறி உள்ளார்.

இந்தநிலையில் பணி முடித்து வீடு திரும்பிய தயால் சிங் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் காரணமாக ஏற்கனவே கியாஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பணிச்சுமையை சமாளிக்க முடியாமல், அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என கியாஸ் நிறுவனத்தில் உள்ள அவரது சக ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஆனால், அவரது குடும்பத்தினர் இதை மறுத்தனர். அவர் உயிரிழந்ததில் சந்தேகம் இருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் உயிரிழந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்றும் கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தயால் சிங் ராவத்தின் உயிரிழப்பு குறித்து மாவட்ட மருத்துவமனை எங்களுக்குத் தகவல் அளித்தது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம் என்றும் இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.