இந்தியா

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாட்டு மக்களிடம் புதிய நம்பிக்கையை தரும் - பிரதமர் மோடி

மாநிலங்களவையில் இன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது. மொத்தம் உள்ள 205 எம்.பி.க்களும் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

மாலை மலர்

புதுடெல்லி:

பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இக்கூட்டத் தொடர் மொத்தம் 5 நாட்கள் நடைபெறுகிறது.

இந்தச் சிறப்பு கூட்டத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு மக்களவையில் நிறைவேறியது.

இதேபோல், மாநிலங்களவையிலும் இன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது. 205 எம்.பி.க்கள் ஆதரவாக வாக்களித்தனர். ஒருவரும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசுகையில், மசோதா நிறைவேற ஒருமித்த கருத்துடன் ஆதரவு அளித்த அனைத்து எம்.பி.க்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மசோதா நிறைவேறியது அரசியல் கட்சிகளின் நேர்மறை சிந்தனையைக் காட்டுகிறது. மசோதா நிறைவேறியதன் மூலம் நாட்டு மக்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். மகளிருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் புதிய ஆற்றலை கொடுக்கும் என தெரிவித்தார்.

இதேபோல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு இந்தியா கூட்டணி முழு ஆதரவு அளிக்கிறது என கூறினார்.