இந்தியா

ஆந்திராவில் டிக்கெட் கேட்ட கண்டக்டர் கன்னத்தில் பளார் விட்ட பெண்

கண்டக்டரை தாக்கிய பெண்ணும் அவர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால் தாக்கியதாக புகார் தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து விசான் பேட்டைக்கு நேற்று ஆந்திர மாநில அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். சிங் நகர் பஸ் நிலையத்தில் பஸ் நின்றபோது 2 பெண்கள் பஸ்சில் ஏறினர்.

அப்போது கண்டக்டர் சீனிவாச ராவ் என்பவர் பஸ்சில் ஏறிய 2 பெண்களிடம் டிக்கெட் வாங்க சொன்னார். 2 பெண்களில் ஒருவர் தன்னிடம் இருந்த 3 ஆதார் கார்டுகளை காட்டினார்.

பஸ்சில் 2 பேர் மட்டுமே பயணம் செய்கிறீர்கள். ஏன் 3 ஆதார் கார்டுகளை காண்பிக்கிறீர்கள் என கண்டக்டர் கேட்டார். இதனால் கண்டக்டருக்கும் அந்த பெண்ணிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த பெண் திடீரென கண்டக்டரின் கன்னத்தில் பளார் என அறைந்தார். இதனை சற்றும் எதிர்பாராத கண்டக்டர் நிலைக்குலைந்து போனார்.

உடனடியாக பஸ் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தன்னை கன்னத்தில் அறைந்த பெண் மீது போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதேபோல் கண்டக்டரை தாக்கிய பெண்ணும் அவர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால் தாக்கியதாக புகார் தெரிவித்தார். போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.