இந்தியா

கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பா?.. கொதித்த தொழிலதிபர் - சித்தராமையா பதில்

தடுப்பூசிக்குப் பிறகு மாரடைப்பு அதிகரித்துள்ளது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.ICMR மற்றும் AIIMS இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மாலை மலர்

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 19 மாரடைப்பு மரணங்கள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடந்த முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். மேலும் கொரோனா தடுப்பூசி இந்த மரணங்களில் பங்கு வகிப்பதை மறுக்க முடியாது என்று சித்தராமையா தெரிவித்தார்.

தடுப்பூசிகளுக்கு அவசரமாக ஒப்புதல் அளிக்கப்பட்டது என்ற சித்தராமையாவின் கூற்று உண்மைக்கு மாறானது என்றும், அது சமூகத்தில் தவறான தகவல்களைப் பரப்ப வழிவகுக்கும் என்றும் பயோடெக்னாலஜி நிறுவனமான பீக்கன் லிமிடெட் நிர்வாகத் தலைவரும் தொழிலதிபருமான கிரண் மஜும்தார் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பதில்களைத் தேடுவதைக் குறை கூறுவதாகக் கருத முடியாது என்று சித்தராமையா கிரண் மஜும்தாருக்கு  பதிலளித்துள்ளார்.

முதலமைச்சராக, மக்களின் கவலைகளை நிவர்த்தி செய்வது எனது கடமை. குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் எதிர்பாராத விதமாக தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர். ஒரு விஷயத்தில் தெளிவு கோருவது தவறான பிரச்சாரம் அல்ல. தடுப்பூசிக்குப் பிறகு மாரடைப்பு அதிகரித்துள்ளது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

உலகளாவிய சுகாதார அவசரநிலையின் போது இந்த தடுப்பூசி அவசரமாக அங்கீகரிக்கப்பட்டது என்று உலக சுகாதார அமைப்பே கூறியுள்ளது. ஒரு தொற்றுநோய் காலத்தில் இவ்வளவு அவசரம் தவறு அல்ல. ஆனால் இதன் விளைவுகளைப் புரிந்துகொள்வது நல்லது என்று கூறினார்.

இதற்கிடையே கோவிட் தடுப்பூசியை திடீர் மரணங்களுடன் இணைக்கும் அறிக்கைகள் தவறானவை என்றும் இளைஞர்களின் திடீர் மரணங்களுக்கு வாழ்க்கை முறை மற்றும் முன்பே இருக்கும் மருத்துவ நிலைமைகள் முக்கிய காரணிகள் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் AIIMS இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.