மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம் கேட் சாலை ஓரமாக பலத்த காயங்களுடன் ஒருவர் விழுந்து கிடப்பதாக ராவ் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து போலீசார் விபத்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இதனிடையே சம்பவ இடத்தில் காலி தோட்டாக்கள் கிடந்தன. இதனால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் பிணமாக கிடந்தவர் அதே பகுதியை சேர்ந்த நவீன் பதிதார் என்றும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இதனை அடுத்து கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். 100-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த பகுதியில் ஒரு மோட்டார்சைக்கிள் வந்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அதை வைத்து விசாரித்து உஜ்ஜைனை சேர்ந்த பிரபல ரவுடி முகேஷ் குமாவத், தேவாஸ் மாவட்டத்தை சேர்ந்த ஜாய் தோல்பூரியா, ஸ்ரீராம் பாலாய் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் கள்ளக்காதல் விவகாரத்தில் நவீன் பதிதார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவரது மனைவி பார்தி என்பவருக்கும் ரவுடி முகேஷ் குமாவத்துக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது.
இந்த விவரம் நவீன் பதிதாருக்கு தெரியவந்ததால் அவர் கண்டித்தார். இதனால் அவரை கொலை செய்ய பார்தியும், முகாஷ் குமாவத்தும் 3 ஆண்டுகளாக சதி திட்டம் தீட்டி நிறைவேற்றி உள்ளனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பார்தியையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ராகுல் உய்கே என்பவரை போலீசார் தேடி வெருகிறார்கள். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.