காவிரி நீர் பிரச்சினை- உச்சநீதிமன்றம்
இந்தியா

தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறக்க கர்நாடகாவுக்கு என்ன பிரச்சனை? உச்சநீதிமன்றம் கேள்வி

கூடுதல் கோரிக்கைகள் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிடலாம்.

காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்கக் கூடிய தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டதில் இவ்வாறு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரித்தது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீர் அளவு எவ்வளவு?

அப்போது, தமிழ்நாடு அரசு வாதிடுகையில், "கர்நாடக அணைகளில் 78 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. விகிதாச்சாரப்படி எங்களுக்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்கவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட தண்ணீர் வந்து விட்டாலும், முந்தைய பற்றாக்குறை நீரை ஈடுசெய்ய போதிய உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை" என வாதிடப்பட்டது.

கர்நாடக அரசு தரப்பில், "காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நாளை நடைபெற உள்ளது. எங்களை பொறுத்தவரை நீர் பங்கீட்டில் எந்த பிரச்சினையும் இல்லை" என வாதிட்டது.

அப்போது, தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து உரிய நீரை திறக்க கர்நாடகாவுக்கு என்ன பிரச்சனை என சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. மேலும், தற்போதைய சூழல் குறித்து காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருதரப்பும் புதிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். கூடுதல் கோரிக்கைகள் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிடலாம் எனவும் திறக்கப்பட்ட நீர், பெறப்பட்ட நீரின் அளவு பற்றி அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வருகிற 31-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.