திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற எம்பியுமான அபிஷேக் பானர்ஜி மீது நடத்தப்பட்ட மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமக்கு ஆதரவு தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு அபிஷேக் பானர்ஜி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
டயமண்ட் ஹார்பர் தொகுதி எம்.பி-யான அபிஷேக் பானர்ஜி, நேற்று தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் சோனார்பூர் பகுதிக்குச் சென்றிருந்தார்.
தேர்தல் பிந்தைய வன்முறையில் கொல்லப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் சஞ்சு கர்மாகரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக அவர் அங்கு சென்றார்.
அப்போது அங்கிருந்த ஒரு கும்பல் அவர் மீது கற்கள், காலணிகள் மற்றும் முட்டைகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் அவரது ஆடை கிழிக்கப்பட்டதுடன், கண் கண்ணாடியும் உடைந்தது.
பின்னர், பாதுகாப்பு அதிகாரிகள் அவருக்கு ஹெல்மெட் அணிவித்து பத்திரமாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவத்திற்கு சமூக வலைத்தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ள மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "ஒரு மக்கள் பிரதிநிதி மீதான தாக்குதல் என்பது தனிநபர் மீதானது அல்ல, அது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். இது பாஜகவின் பழிவாங்கும் அரசியலின் கோர முகம்" என்று சாடினார்.
மேலும், அபிஷேக் பானர்ஜியின் உடல்நிலை குறித்து மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இந்நிலையில் தன் மீதான தாக்குதல் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அபிஷேக் பானர்ஜி தனக்கு ஆதரவளித்த ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், ராகுல் ஜி, உங்கள் அக்கறைக்கும் தொடர் ஆதரவுக்கும் நன்றி. இந்தியாவின் ஆன்மாவைக் காக்கவும், அதன் ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாக்கவும், நமது அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநிறுத்தவும் நாம் அனைவரும் ஒன்றுபட்டு, உறுதியுடன் போராடி வருகிறோம்.
கடந்த ஆண்டு, 'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பான அனைத்துக் கட்சிக் குழுவின் ஒரு பகுதியாக, இந்தியாவைப் பிரதிநிதித்து நான் ஐந்து நாடுகளுக்குப் பயணம் செய்தேன். அங்கே நான் என் நாட்டிற்காக வாதாடினேன்; பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டு நின்றேன்.
இன்றோ, தேசியத்தின் காவலர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் சிலரால் கட்டவிழ்த்து விடப்பட்ட அரசியல் வன்முறைக்கும், அரசால் தூண்டிவிடப்படும் பயங்கரவாதத்திற்கும் பலியான ஒருவராக நான் நிற்கிறேன்.
இதுவே இன்றைய பாஜகவின் எதார்த்த நிலையாகும். நீங்கள் அவர்களை ஆதரித்தால், நீங்கள் ஒரு தேசபக்தர். நீங்கள் அவர்களைக் கேள்வி கேட்டால், நீங்கள் ஒரு இலக்காகிவிடுகிறீர்கள்.
நீங்கள் அவர்களுடன் நின்றால், நீங்கள் கொண்டாடப்படுகிறீர்கள். நீங்கள் அவர்களுக்கு எதிராக நின்றால், அவர்கள் உங்களை மௌனமாக்க முயல்கிறார்கள்.
என் கொள்கைகளைத் துறந்து சுகபோகங்களை அனுபவிப்பதை விட, ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பணியில் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதையே நான் விரும்புவேன்.
அதிகாரம் என்பது தற்காலிகமானது. மக்களின் விருப்பமே நிரந்தரமானது. நான் மக்களுக்கு முன்னால் மட்டுமே தலைவணங்குவேன்; அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு முன்னால் ஒருபோதும் தலைவணங்க மாட்டேன்.
'இந்தியா' (கூட்டணி) ஒன்றுபட்டு நிற்கிறது; வன்முறை அரசியல் தோற்கடிக்கப்படுவதையும், மக்களின் குரலே இறுதியில் வெல்வதையும் நாம் அனைவரும் இணைந்து உறுதி செய்வோம்." என்று பதிவிட்டுள்ளார்.