மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் ரூ4,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாகவும் முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு சட்டவிரோத வீட்டு மனை ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை கர்நாடக முதல்வர் சித்தராமையா மறுத்துள்ளார்.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி சம்பந்தப்பட்ட மூடா ஊழல் தொடர்பாக சட்டசபையில் விவாதிக்க வேண்டும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்தனர். அதனை சபாநாயகர் மறுத்த நிலையில், சட்டசபையில் இரவு பகலாக தர்ணா போராட்டத்தை பாஜக எம்.எல்.ஏ.க்கள் நடத்தினர்.
மூடா ஊழல் முறைகேடுகளுக்கு எதிராக பாத யாத்திரை மேற்கொள்ள அம்மாநில பாஜக முடிவு செய்துள்ளது. பெங்களூருவில் இருந்து மைசூரு வரை ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை இந்த பாத யாத்திரை நடைபெறும் என்று பாஜக அறிவித்தது.
இந்நிலையில், பாஜகவின் இந்த பாத யாத்திரையில் பங்கேற்கப்போவதில்லை என்று பாஜகவின் கூட்டணிக் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் அறிவித்துள்ளது.
பாஜகவின் இந்த பாத யாத்திரை போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு கூட தரப்போவதில்லை என்று மத்திய அமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "கனமழையைத் தொடர்ந்து மக்கள் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில் இதுபோன்ற போராட்டங்கள் நடத்துவதற்கு இது சரியான நேரம் அல்ல. இந்த சமயத்தில் நாம் மக்களுடன் இருக்க வேண்டும். ஆகவே பாஜகவின் பாத யாத்திரை போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
பாஜகவின் இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தும் பாஜகவின் ப்ரீதம் கவுடா, எங்கள் குடும்பத்தை அழிக்க வேண்டும் என்று துடித்தவர். பென்-டிரைவ் விநியோகத்திற்கு யார் பொறுப்பு? என் சகிப்புத்தன்மைக்கும் ஒரு எல்லை உண்டு. ஹாசனில் என்ன நடந்தது என்பது இவர்களுக்கு தெரியாதா? அதற்கு யார் பொறுப்பு?'' என்று அவர் கோபத்துடன் பேசினார்.
ஹாசனில் நடந்து மக்களவை தேர்தலுக்கு முன்பாக, தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோக்கள் அடங்கியதாகக் கூறப்படும் பென்-டிரைவ்களை பெரிய அளவில் விநியோகம் செய்யப்பட்டதை குமாரசாமி குறிப்பிடுகிறார்.