ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் பாகிஸ்தான் இந்தியா இடையே விரிசலை ஏற்படுத்தியுள்ள நிலையில் இரு நாடுகளும் முப்படைகளை தயார் நிலையில் வைத்துள்ளன.
இந்நிலையில் இந்திய விமானப்படை நேற்று தீவிர போர்ப்பயிற்சியை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய செக்டாரில் ஒரு பரந்த பகுதியில் இந்த பயிற்சியும், ஒத்திகையும் நடந்துள்ளது. இந்த பயிற்சியில் சுகோய்-30 ரக விமானங்கள், ரபேல் விமானங்கள் உள்ளிட்ட நவீன போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
இதற்காக அரியானாவின் அம்பாலா மற்றும் மேற்கு வங்காளத்தின் ஹசிமாரா விமானப்படை தளங்களில் இருந்து 2 ரபேல் விமான படைப்பிரிவுகள் பயிற்சித்தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ரபேல் விமானங்கள் தரை இலக்குகளை துல்லியமாக தாக்குவது உள்ளிட்ட சிக்கலான பணிகளை கச்சிதமாக செய்து முடிப்பவை ஆகும். ஆனால் இது வழக்கமான பயிற்சிதான் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பலான ஐ.என்.எஸ். சூரத்தின் மூலம் நடத்தப்பட்ட தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணை சோதனை நடப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையானது சுமார் 70 கி.மீ. தூரம் வரையில் பாய்ந்து அதன் இலக்கை தாக்கக் கூடிய திறன் வாய்ந்தது எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்தியக் கடற்படை கூறியதாவது, 'ஏவுகணைகளை அழிக்கக்கூடிய திறன்கொண்ட உள்நாட்டு வழிகாட்டப்பட்ட ஐ.என்.எஸ். சூரத் எனும் போர்க்கப்பலானது தனது இலக்கைத் துல்லியமாக தகர்க்கும் ஏவுகணைச் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. இது கடற்படையின் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை அடைந்துள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
#IndianNavy's latest indigenous guided missile destroyer #INSSurat successfully carried out a precision cooperative engagement of a sea skimming target marking another milestone in strengthening our defence capabilities. Proud moment for #AatmaNirbharBharat!@SpokespersonMoD… pic.twitter.com/hhgJbWMw98