இந்தியா

VIDEO: மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் 'புனித' நீராடிய பிரதமர் மோடி!

அங்கிருந்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் படகில் சென்றார்.கூட்டநெரிசலில் 30 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தின்பின் மோடி தற்போது வருகை தந்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கி, கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சாதுக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

பொது மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் புனித நீராடி வருகின்றனர். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புனித நீராடினார்.

இந்த வரிசையில் பிரதமர் மோடி இன்று பிரயாக்ராஜ் சென்றுள்ளார். மோடியின் 'தனி விமானம்' பாம்ராலி விமான நிலையத்தை அடைந்தது.

அங்கே ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் இரு துணை முதல்வர்களும் அவரை வரவேற்றனர். விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் டிபிஎஸ் ஹெலிபேடை மோடி வந்தடைந்தார்.

இங்கிருந்து வாகனம் மூலம் விஐபி காட் பகுதியை அடைந்தார். அங்கிருந்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் படகு மூலம் ஏரியல் கோட் பகுதியை சென்றடைந்த பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

தலைநகர் டெல்லியில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடி கும்பமேளாவில் புனித நீராடி உள்ளார்.

பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. அடுத்ததாகப் பக்தர்களுடன் மோடி உரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜனவரி 29 ஆம் தேதி மகா கும்பமேளாவில் நடந்த கூட்டநெரிசலில் 30 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தின்பின் மோடி தற்போது இங்கு வருவது குறிப்பிடத்தக்கது.