சஸ்பெண்டு 
இந்தியா

மாணவிகளுடன் குளித்த வீடியோ வைரல்.. அரசுப் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

மாணவர்கள் சிலர் இந்த காட்சிகளை தங்கள் மொபைலில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்

ராஜஸ்தானில் மாணவிகளுடன் அணையில் ஆடையின்றி குளித்த விவகாரத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

அரசுப் பள்ளி

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் தானாகாசி பகுதியில் ரவுபாவி படக் சப்ளி அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இதன் தலைமை ஆசிரியராக லால் சந்த் மீனா உள்ளார்.

கடந்த ஆகஸ்ட் ஆகஸ்ட் 15 சுதந்திர தின கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு, 9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 200 மாணவ மாணவிகளை 2 கி.மீ தொலைவில் உள்ள படாஜ் அணைக்கு காட்டுப்பாதை வழியாக தலைமை ஆசிரியர் அழைத்துச் சென்றுள்ளார்.

சுற்றுலா என்ற பெயரில்

சுற்றுலா என்ற பெயரில் மாணவ மாணவிகளை அவர் கூட்டிச் சென்ற நிலையில் இதன்போது மாணவிகளுடன் பாதுகாப்புக்கு எந்த ஒரு பெண் ஆசிரியரும் உடன் செல்லவில்லை.

அணையில் 11 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்த நிலையில், தலைமை ஆசிரியர் மேலாடையின்றி மாணவிகளுடன் நீரில் குளித்துள்ளார்.

மேலும் நீச்சல் கற்றுத்தருவதாகக் கூறி சில மாணவிகளின் கைகளை தூக்கியதாகவும் கூறப்படுகிறது.

மாணவர்கள் சிலர் இந்த காட்சிகளை தங்கள் மொபைலில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது காட்டுத்தீ போல் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மக்கள் கொந்தளிப்பு

வீடியோ வைரலானதை அடுத்து, கிராம மக்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டுத் தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

படாஜ் அணையின் கரை வெறும் 5 முதல் 6 அடி மட்டுமே அகலமுடையது என்றும், ஆபத்தான பகுதி என்பதால் கடந்த நான்கு ஆண்டுகளாக அங்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அப்பகுதியில் புலிகள் நடமாட்டமும் உள்ள நிலையில், முறையான பாதுகாப்பு உடைகளோ அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகளோ இன்றி, நீச்சல் தெரியாத மாணவர்களை அங்கு அழைத்துச் சென்றது ஏன் என கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நடவ்டிக்கை

சம்பவம் தொடர்பாகத் தானாகாசி காவல்துறையினர் பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்டு, தலைமை ஆசிரியரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

வீடியோவின் உண்மைத்தன்மை மற்றும் சூழ்நிலைகள் குறித்துப் பொலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனிடையே, தலைமை ஆசிரியர் லால் சந்த் மீனாவின் இந்த செயல் அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளுக்கு முற்றிலும் எதிரானது எனக் கூறி, கல்வி இயக்குனரகம் அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் அவர் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது.