உத்தரப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தனது உயிரை பணயம் வைத்து சிறுத்தையிடம் துணிச்சலுடன் போராடிய வீடியோ வைரலாகி வருகிறது.
லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள தௌர்பூர் வனப்பகுதிக்கு உட்பட்ட ஜுக்னுபூர் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் ஒரு சிறுத்தை புகுந்தது.
அப்போது மிஹிலால் என்ற 35 வயது தொழிலாளி தனது உயிரைப் பணயம் வைத்து சிறுத்தையுடன் கடுமையாகப் போராடினார். சிறுத்தையை கீழே தள்ளி அதன் வாயை இறுக்கமாகப் பிடிக்க முயன்றார்.
மிஹிலால் சிறுத்தையை எதிர்கொள்வதைக் கண்ட சக தொழிலாளர்கள் மற்றும் அருகிலுள்ள கிராம மக்கள் உடனடியாக அதன் மீது செங்கல் மற்றும் கற்களால் தாக்கினர்.
இறுதியில் சிறுத்தை அருகிலுள்ள விவசாய வயல்களுக்குள் தப்பி ஓடியது. தகவல் கிடைத்ததும், வனத்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுத்தைக்கு மயக்க ஊசி போட்டு பிடித்தனர்.
சிறுத்தை தாக்குதலில் மிஹிலால் மற்றும் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.