மகாராஷ்டிரா தலைநகர் மும்பை அருகே வாசி பகுதியில் 4 வயது சிறுவனை நபர் ஒருவர் காலை பிடித்து தூக்கி தரையில் போட்டு இரும்பு கம்பியால் சிறுவனின் தலையை அடித்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று அங்குள்ள குடியிருப்பு பகுதியில் விக்னேஷ் என்ற அந்த சிறுவன் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ ரிக்ஷா ஒன்றில் அமர்ந்தபடி சக சிறுவர்களுடன் விளையாடி கொண்டிறிந்தான்.
அப்போது அங்கு வந்த சந்தீப் பவார் என்ற நபர் விக்னேஷின் காலை பிடித்து ஆட்டோவில் இருந்து வெளியே இழுத்துப்போட்டு அவனை தரையோடு மீண்டும் மீண்டும் தூக்கி அடித்துள்ளார்.
பின்னர் கட்டிடம் ஒன்றுக்குள் ஓடிச் சென்று இரும்பு கம்பியை எடுத்து வந்து சிறுவனின் தலையில் அடித்த அவர் மீண்டும் சிறுவனை தூக்கி தரையோடு மோதச் செய்துள்ளார்.
இது அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது. சிறுவன் விக்னேஷின் தந்தையுடன் சந்தீப் பவாருக்கு சிறிய விஷயம் தொடர்பாக தகராறு இருந்துள்ளது. அந்த ஆத்திரத்தில் பவார் இந்த காட்டுமிராண்டித்தனத்தில் ஈடுபட்டுள்ளார்.
படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக மீரா சாலையில் உள்ள ஆஸ்பத்ரிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு அவனுக்கு ஐசியுவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவனது உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதலில் ஈடுபட்ட சந்தீப் பவார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குடியிருப்பு பகுதியில் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.