இந்தியா

மேற்கு வங்கத்தில் மதரஸாக்களில் வந்தே மாதரம் கட்டாயம்

அரசு மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் இசைக்கப்படும் முன் 'வந்தே மாதரம்' பாடல் கட்டாயமாக ஒலிக்கப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் தேசிய கீதமான ஜன கன மன பாடலுக்கு இணையான அந்தஸ்தை வந்தே மாதரம் பாடலுக்கு மத்திய அரசு வழங்கி இருந்தது. அரசு மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் இசைக்கப்படும் முன் 'வந்தே மாதரம்' பாடல் கட்டாயமாக ஒலிக்கப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.

அதன்படி, மேற்குவங்கத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி நிகழ்வுகளிலும் தேசிய கீதத்துடன், வந்தே மாதரம் பாடலையும் கட்டாயமாக்கி கடந்த வாரம் அம்மாநில அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, அனைத்து பள்ளிகளிலும் காலை வழிபாட்டின்போது தேசப்பாடலான வந்தே மாதரம் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது.

அதேபோல், மதரஸாக்களில் 'வந்தே மாதரம்' பாடுவதை மேற்கு வங்க அரசு கட்டாயமாக்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மதரஸாக்களிலும் காலை வழிபாட்டின்போது 'வந்தே மாதரம்' பாடுவதை மதரஸா கல்வி இயக்குநரகம் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் கட்டாயமாக்கி உள்ளது.