புதுடெல்லி:
நாடு முழுவதும் அடுத்தடுத்து அறிமுகப்படுத்தப்பட்டு வரும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பயணிகளை கவர்ந்து வருகின்றன. நவீனம், சொகுசு, அதிவேகம் காரணமாக பயணிகள் வந்தே பாரத் ரெயில்களில் பயணிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
தற்போது, நாட்டில் ரெயில் வழித்தடம் மின்மயமாக்கப்பட்ட 24 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் 46 வந்தே பாரத் ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இவற்றில் பெரும்பாலான வந்தே பாரத் ரெயில்கள் நூறு சதவீத பயணிகளுடன் இயக்கப்படுகின்றன.
ஆனால் அதேவேளையில், இந்தூர்-போபால், போபால்-ஜபல்பூர், நாக்பூர்-பிலாஸ்பூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்களில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
எனவே பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும், பயணிகளின் வசதி கருதியும், 2 மணி முதல் 5 மணி நேர குறைந்த தூர வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கட்டணத்தை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம், மேலும் அதிகமான பயணிகள் வந்தே பாரத் ரெயில்களை பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறோம் என ரெயில்வே மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.