உத்தரகாண்டின் ரிஷிகேஷில் உள்ள யோக் நகரி ரெயில் நிலையம் அருகே நேற்று இரவு உஜ்ஜைன் எக்ஸ்பிரஸின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவம் நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் காண்ட் கிராமப் பகுதியில் நிகழ்ந்தது. அப்போது ரெயிலில் பயணிகள் யாரும் இல்லை.
வழக்கமான பராமரிப்பின்போது ஏற்பட்ட பிரேக் செயலிழப்பே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், ரெயிலின் இயக்கம் மற்றும் சம்பவத்திற்குப் பிறகு பின்பற்றப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
தடம் புரண்ட சுமார் இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு மூத்த ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தண்டவாளங்களுக்கு அருகே பெருங்கூட்டம் கூடியது. பின்னர், அரசு ரெயில்வே காவல்துறையினர் அக்கூட்டத்தைக் கலைய செய்தனர். இவ்விவகாரம் குறித்து ரெயில்வே துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.