பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மது அருந்திவிட்டு சட்டப்பேரவைக்கு வந்ததாகக் கூறி, அவருக்கு மது பரிசோதனை நடத்தக் கோரிய எதிர்க்கட்சிகளின் மனுவை சபாநாயகர் குல்தார் சிங் சந்த்வான் நிராகரித்தார்.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற பஞ்சாப் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் போது, அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் மதுபோதையில் இருந்ததாக காங்கிரஸ் எம்.எல்.ஏ சுக்பால் சிங் கைரா குற்றம் சாட்டினார்.
அவரின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா, முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் உடனடியாக மது பரிசோதனை செய்ய வேண்டும் என்று சபாநாயகருக்கு கடிதம் எழுதினார்.
இந்தக் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர் குல்தார் சிங் சந்த்வான், அவை நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். இதனால் அதிருப்தியடைந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து, பாஜக மற்றும் அகாலி தல் சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், அவையின் மாண்பைக் குலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாகவும் ஆளும் ஆம் ஆத்மி கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.