இந்தியா

கணவர் மீது ஆசிட் வீசிய பெண்ணுக்கு ஆயுள் தண்டனை - நீதிபதி அதிரடி

வீட்டில் உறங்கி கொண்டிருந்தபோது அவர் மீது ஆசிட் ஊற்றியதாக கூறப்படுகிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் சம்பல் மாவட்டத்தில் உள்ள விரைவு நீதிமன்றம், உறங்கி கொண்டிருந்த தன் கணவர் மீது அமிலம் (ஆசிட்) வீசியதில், அவர் கடுமையாக உருக்குலைந்து நிரந்தரமாக பார்வையிழந்த வழக்கில், ஒரு பெண்ணுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1.75 லட்சம் அபராதமும் விதித்தது.

சந்தௌசியின் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி கோபால் ஜி, மே 27-ஆம் தேதியன்று குற்றம்சாட்டப்பட்ட கஹ்கன்ஷா (30) என்பவரை குற்றவாளி என தீர்ப்பளித்த பின்னர், நேற்று (திங்கள் கிழமை) தண்டனையை அறிவித்தார்.

சிறப்பு அரசு வழக்கறிஞர் நரேந்திர குமார் யாதவின் கூற்றுப்படி, இந்த சம்பவம் 2025 மார்ச் 7 அன்று நக்காசா காவல் நிலையப் பகுதியில் நிகழ்ந்துள்ளது. கஹ்கன்ஷா தனது கணவர் முசாஃபரை (35) கொலை செய்யும் நோக்கத்தில், அவர் வீட்டில் உறங்கி கொண்டிருந்தபோது அவர் மீது ஆசிட் ஊற்றியதாக கூறப்படுகிறது.

முதல் தாக்குதலுக்குப் பிறகு முசாஃபர் தப்பிக்க முயன்றபோது, ​​அந்தப் பெண் அவர் மீது மீண்டும் அமிலம் வீசியதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார். இந்த தாக்குதலால் அவரது முகம் முற்றிலும் சிதைந்து போனதுடன், இரு கண்களிலும் பார்வை இழப்பும் ஏற்பட்டது.

தம்பதியினர் அடிக்கடி சண்டையிட்டு கொள்வதாகவும், தனக்கு திருமணத்திற்கு புறம்பான உறவு இருப்பதாக கூறி அப்பெண் விவாகரத்து கோரி வருவதாகவும் யாதவ் கூறினார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்ட நீதிமன்றம், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1.75 லட்சம் அபராதமும் விதித்தது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.