இந்தியா

Crime | ஷூ அணிவது தொடர்பான பிரச்சினை... கத்திரிக்கோலால் தம்பியை கொன்ற அண்ணன்

காயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்ததாக காவல்துறை தெரிவித்தது.

உத்தரப் பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில், புதிதாக வாங்கிய காலணிகளை அணிவது தொடர்பாக ஏற்பட்ட ஒரு சிறிய தகராறில் சிறுவன் ஒருவன் தனது தம்பியை கத்தரிக்கோலால் தாக்கிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குக்லி காவல் நிலைய பகுதிக்குட்பட்ட சௌமுகா நௌகா டோலா கிராமத்தில், காலை சுமார் 10.30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. காவல்துறை தகவல்படி, ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட காலணிகளை முதலில் யார் அணிவது என்பது தொடர்பாக சூரஜ் ஷர்மா (16) மற்றும் அவரது தம்பி லக்ஷ்மன் ஷர்மா (15) ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் விரைவில் முற்றிய நிலையில், ஆத்திரத்தில் சூரஜ் கத்தரிக்கோலை எடுத்து லட்சுமணனை தாக்கியதில், அவனது தலையிலும் கைகளிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்ததாக காவல்துறை தெரிவித்தது.

குடும்ப உறுப்பினர்கள் லட்சுமணனை குக்லியில் உள்ள ஒரு சமூக சுகாதார மையத்திற்கு அவசரமாக கொண்டு சென்றனர். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அங்கிருந்து அவர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இருப்பினும், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவர் இருவரும் சிறார்கள் என கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சித்தார்த் குமார் தெரிவித்தார். காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அவர் உறுதிப்படுத்தினார், மேலும் சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக முறைப்படி விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.