இந்தியா

உத்தரபிரதேசத்தில் 2-வது திருமணம் செய்ய வற்புறுத்திய நண்பனின் மனைவியை குத்திக் கொன்ற காதலன்

பாப்லியுடன் பழகிய விகாஸ் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

மாலை மலர்

உத்தரபிரதேச மாநிலம் புலந்தஷார் மாவட்டத்தை சேர்ந்தவர் பாப்லி. இவரது கணவர் அஜய் புற்றுநோய் பாதிப்பு காரணமாக ஏற்கனவே இறந்துவிட்டார்.

இதையடுத்து அஜய்யின் நண்பர் விகாஸ் என்பவருடன் பாப்லிக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இருவரும் ஒன்றாக நெருங்கி பழகி வந்தனர்.

இந்த நிலையில் விகாசுக்கு அவரது வீட்டில் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதை அறிந்து ஆத்திரமடைந்த பாப்லி விகாசுடன் இது குறித்து கேட்டு சண்டை போட்டார். உடனே நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அவரை தொடர்ந்து வற்புறுத்தினார். இதனால் எரிச்சலடைந்த விகாஸ் பாப்லியை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து விகாஸ், தனது உறவினர் அமன் மற்றும் மற்றொரு கூட்டாளியுடன் சேர்ந்து, பாப்லியை ஒரு மோட்டார் சைக்கிளில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு பாப்லியை கத்தியால் குத்திக் கொலை செய்தார்.

பின்னர் அடையாளம் காண முடியாதபடி, அவர்கள் பாப்லியின் தலையைத் துண்டித்து, சுமார் 500 மீட்டர் தொலைவில் வீசி எறிந்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இந்தநிலையில் தலை துண்டிக்கப்பட்ட சடலம் ஒன்று அப்பகுதியில் கிடந்ததால், பீதி அடைந்த மக்கள் இது குறித்து போலீசாருக்கு தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். உயிரிழந்தவர் பாப்லி என்பதை போலீசார் உறவினர்கள் உதவியுடன் உறுதிப்படுத்தினர்.

இதையடுத்து கொலையாளிகள் குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். பாப்லியுடன் பழகிய விகாஸ் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் பாப்லியை கொலை செய்ததை போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கு உதவிய மற்ற இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.