இந்தியா

குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் போட்டி: மத்திய மந்திரி அமித்ஷா இன்று பிரமாண்ட 'ரோடு ஷோ'

2-வது ரோடு ஷோ காந்திநகர் மாவட்டம் கலோல் நகரில் உள்ள ஜே.பி.கேட் முதல் கலோலில் உள்ள டவர் சவுக் வரை நடந்தது. வெஜல்பூரில் குஜராத் மாநில பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசுகிறார்.

காந்திநகர்:

மத்திய மந்திரி அமித்ஷா, பாராளுமன்ற தேர்தலில் குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அவர் நாளை தனது வேட்புமனுவை காந்திநகர் கலெக்டர் அலுவலகத்தில் தாக்கல் செய்கிறார். இதற்காக குஜராத்துக்கு சென்றுள்ள அமித்ஷா இன்று அகமதாபாத்தில் 3 இடங்களில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை சனந்த் பகுதியில் தனது ரோடு ஷோவை தொடங்கினார். இந்த ஊர்வலம் நல்சரோவர் சவுக் பகுதி வரை நடந்தது.

இதில் பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது அமித்ஷா மீது மலர்கள் வீசப்பட்டன. அவர் பொதுமக்களை பார்த்து கையசைத்தபடி சென்றார்.

பின்னர் 2-வது ரோடு ஷோ காந்திநகர் மாவட்டம் கலோல் நகரில் உள்ள ஜே.பி.கேட் முதல் கலோலில் உள்ள டவர் சவுக் வரை நடந்தது. அமித்ஷாவின் 3-வது ரோடு ஷோ இன்று மாலை 4 மணிக்கு ரனிப்பில் உள்ள சர்தார் படேல் சவுக்கில் தொடங்கி வெஜல்பூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஜிவ்ராஜ் பார்க் சார் ரஸ்தாவில் முடிகிறது.

பின்னர் வெஜல்பூரில் குஜராத் மாநில பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசுகிறார்.