ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று காலை பயணிகள் பேருந்து ஒன்று மலையில் இருந்து உருண்டு விபத்துக்குள்ளானது. இதில் 15 பயணிகள் உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர்.
இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா, துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும். "துயரம் சூழ்ந்த இந்நேரத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அரசாங்கம் உறுதுணையாக நிற்கிறது; மேலும், தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு "ஜம்மு- காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் பலர் உயிரிழந்தது குறித்து அறிந்து நான் மிகுந்த துயரமடைந்தேன். இந்த துயர சம்பவத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.