இந்தியா

வெறிபிடித்த அணில் கடித்து 18-க்கும் மேற்பட்டோர் காயம்.. பல்கலைக்கழகத்தில் பரபரப்பு

இந்த அணில் ஜன்னல் திரைகளுக்குப் பின்னால் பதுங்கி இருந்து, திடீரென மாணவர்கள் மீது பாய்ந்து கடிக்கிறது.

ராஜஸ்தானின் உதய்பூரில் மோகன்லால் சுகாடியா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

இங்கு ஒரு அணில் கடந்த ஒரு மாதமாக மாணவர்களையும் ஊழியர்களையும் தாக்கி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 18 க்கும் மேற்பட்டோர் இந்த அணிலின் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்துள்ளனர்.

அணில் கடித்த மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் முன்னெச்சரிக்கையாக டெட்டனஸ் ஊசி போடப்பட்டுள்ளது.

இந்த அணில் ஜன்னல் திரைகளுக்குப் பின்னால் பதுங்கி இருந்து, திடீரென மாணவர்கள் மீது பாய்ந்து கடிக்கிறது.

இதனால் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடமாடவே அச்சப்படுகின்றனர்.

குறிப்பாகக் கலைக் கல்லூரி வளாகம், உளவியல் மற்றும் பெண்கள் ஆய்வுத் துறைகளுக்கு அருகில்தான் இந்தத் தாக்குதல்கள் அதிகம் நடக்கின்றன.

இந்த அணிலைப் பிடிக்க Animal Aid என்ற குழுவினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.

வனவிலங்கு நிபுணர்களின் உதவியுடன் அணிலைப் பிடித்து, பாதுகாப்பான வனப்பகுதிக்கு மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.

கோடை வெயில் கடுமையாக இருப்பதால், அதிக வெப்பம் காரணமாகச் சிறிய விலங்குகளுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, அவை ஆக்ரோஷமாக மாற வாய்ப்புள்ளது.

நீண்ட நாட்களாக உணவு கிடைக்காததும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.