உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 15 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய முகமது யாசிருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று போட்டியில் வெற்றி பெற்ற தங்கப் பதக்கத்துடன் திரும்பிய முகமது யாசிரை ஜம்மு- காஷ்மீரின் எல்லைப் பகுதியான ரஜௌரியில், அவரது வெற்றியைக் கொண்டாடவும் வரவேற்கவும் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்.
முகமது யாசிர் (வயது 14), பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவராவார். அவர்களின் இந்த அரிய வெற்றியைக் கொண்டாடுவதற்காக மக்கள் தெருக்களில் ஊர்வலமாகவும் யாசிருக்கு மாலை அணிவிக்கப்பட்டு தோள்களில் சுமந்தபடியும் தெருக்களில் ஊர்வலமாக சென்றனர்.
கொடிய வறுமையையும் வீடின்மையையும் சந்தித்த இவரின் வாழ்வில் தங்கப் பதக்கம் வென்ற இந்த வெற்றி ஒரு புதிய அத்தியாயமாகும். யாசிர் தனது பிழைப்புக்காக ரஜௌரியில் பகுதி நேர சமையல்காரராகப் பணிபுரிந்து வருகிறார். தனது ஆறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்டார்.
ஜம்மு- காஷ்மீர் அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையின்போது அவர்களது எளிய வீடு புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டதால், இவரின் குடும்பம் வீடற்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.
அன்றாட உணவைச் சமாளிக்கப் போராடிக்கொண்டிருந்த அவரது வாழ்க்கையை மாற்றுவதில், உள்ளூர் குத்துச்சண்டை பயிற்சியாளரான இஷ்தியாக் மாலிக் முக்கியப் பங்காற்றினார்.
"கடந்த மூன்று ஆண்டுகளாக எனது பயிற்சியாளர் இஷ்தியாக் மாலிக்கிடம் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகிறேன். அவரது ஆதரவும் வழிகாட்டுதலும் காரணமாகவே என்னால் சிறந்து விளங்க முடிந்தது," என்றார் யாசிர்.
உள்ளூர் மைதானத்தில் குத்துச்சண்டை வீரர்களுக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொண்டிருந்த இச்சிறுவன் யாசிர், தனக்கு 15 ரூபாய் தர மறுத்த உள்ளூர் குத்துச்சண்டை வீரருடன் கைகலப்பில் ஈடுபட்டார்.
தூரத்திலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த பயிற்சியாளர், யாசிரின் குத்துச்சண்டைக்கான அபூர்வத் திறமையை உணர்ந்தார். இது அவரது தலைவிதியையே மாற்றிவிட்டது.
போதைப்பொருள் பழக்கம் நிறைந்திருந்த ஒரு பகுதியில், யாசிரும் அவனது சகோதரனும் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகாமல் இருக்க இந்த விளையாட்டு உதவியதாகவும் மாலிக் கூறினார்.
மூன்று வருடப் பயிற்சிக்குள், இந்த இளம் வீரர் குத்துச்சண்டை வளையத்தில் தனது திறமையை நிரூபித்துள்ளார். ஆசிய குத்துச்சண்டை (15 வயதுக்குட்பட்டோர்) சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற பிறகு, ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதே தனது கனவு என்று யாசிர் கூறுகிறார்.