ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் என மொத்தம் 3 பயங்கரவாதிகளை நேற்று முன்தினம் இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது. தொடர்ந்து அப்பகுதியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஜம்மு காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டு கோடு (எல்.ஓ.சி.) பகுதி வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ முயல்வதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் இன்று அதிகாலை சுட்டு கொன்றனர். இதன் மூலம் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.