இந்தியா

டெல்லியில் அரசுப் பேருந்து மோதி இருவர் பலி.. பேருந்தை தீவைத்து எரித்த பொதுமக்கள் | Delhi

இரண்டு அரசுப் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று ரேஸ் வைத்ததே காரணம்.5 அரசுப் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டது.

மாலை மலர்

டெல்லி நங்லோய் பகுதியில் நேற்று காலை அதிவேகமாக சென்ற அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து முதலில் ஒரு ஸ்கூட்டர் மீது மோதி, பின்னர் அங்கிருந்த ஈ-ரிக்ஷா, பைக் மற்றும் பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஸ்கூட்டரில் சென்ற இளைஞர் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் ரவிகாந்த் (32) மற்றும் கமல்ஜீத் (39) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த ஒரு பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து நடந்தவுடன் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையில் திரண்டனர்.

விபத்து நடந்த போது இரண்டு அரசுப் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று ரேஸ் வைத்ததே இந்த விபத்துக்கு காரணம் என்று அவர்கள் குற்றம்சாட்டினர். 

விபத்தை ஏற்படுத்திய பேருந்தை அடித்து நொறுக்கிய அவர்கள், அதற்குத் தீ வைத்தனர்.

அதே சாலையில் வந்த மற்றொரு அரசுப் பேருந்துக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

மேலும் 5 அரசுப் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் தீபக் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.