இந்தியா

படப்பிடிப்பு தளத்தில் பிரபல நடிகை துனிஷா சர்மா மரணம்- போலீஸ் தீவிர விசாரணை

நடிகை தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டிருந்தார்

மாலை மலர்

மும்பை:

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிரபல தொலைக்காட்சி நடிகை துனிஷா சர்மா (வயது 20), திடீரென மரணம் அடைந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

வசாய் பகுதியில் இன்று நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்ற அவர், மேக்கப் அறைக்கு சென்றார். பின்னர் அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு காரணமா? என்பது தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெறுகிறது.

நடிகை துனிஷா வரும் 4-ம் தேதி தனது 21-வது பிறந்தநாளை கொண்டாடவிருந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இறந்த சம்பவம் ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அலிபாபா தாஸ்தென்- இ- காபுல் என்ற தொடரில் துனிஷா சர்மா கதாநாயகியாக நடித்து வருகிறார். அவரை சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் பின்தொடர்கின்றனர். இன்று படப்பிடிப்பு தளத்தில் மேக்கப் போடப்படும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்ததார். அதுதான் அவர் வெளியிட்ட கடைசி பதிவாகும்.