கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கேவின் அமெரிக்க கல்வி செலவு தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி சூரத்தைச் சேர்ந்த அமித் திவாரி என்ற தகவல் அறியும் உரிமை செயற்பாட்டாளர் மனு அளித்துள்ளார்.
அதாவது அபிஜீத் தீப்கேவின் தந்தை பகவான்ராவ் தீப்கே ஒரு ஓய்வுபெற்ற அரசு ஊழியர். அவர் பணியில் இருந்தபோது அவரது மாதச் சம்பளம் சுமார் ரூ.60,000 முதல் ரூ.65,000 வரை மட்டுமே இருந்திருக்கும்.
அமெரிக்காவின் போஸ்டன் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படிப்பதற்கு சராசரி ஆண்டிற்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை ஆகும். அப்படி இருக்கும்போது, அவரால் அமெரிக்காவில் படித்த தன் பிள்ளைகளின் கல்விச் செலவை எப்படி ஏற்க முடிந்தது? இது விசாரிக்கப்பட வேண்டும்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டிருந்தால் அதுகுறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என மகாராஷ்டிரா அரசு, வருமான வரித்துறை, இந்திய தேர்தல் ஆணையம் ஆகியவற்றுக்கு அமித் திவாரி மனு எழுதியுள்ளார்.
மேலும் மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல், நீட் போராட்டத்தில் ஈடுபட்டு டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்களுக்கு ரூ.1 கோடி நிதி வழங்குவதாக அறிவித்தார். இதுகுறித்தும் விசாரணை நடத்தக் கோரியுள்ளார்.
“கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்பது பதிவு செய்யப்படாத ஒரு அமைப்பு, ஆனால் அது ஒரு அரசியல் கட்சியாகச் செயல்பட்டு வருகிறது. சட்டப் பாதுகாப்பு நிதியாக அதற்கு ரூ.1 கோடி கொடுக்கப்பட்டிருந்தால், சிஜேபி 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 29A பிரிவின் கீழ் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைத் தேர்தல் ஆணையம் சரிபார்க்க வேண்டும்” எனக் கோரியுள்ளார்.