உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நகரத்தில் நான்கு இருக்கைகள் கொண்ட இரட்டை என்ஜின் பயிற்சி விமானம் ஒன்று எதிர்பாராத விதமாக சிக்கிய விபத்தில், விமானத்தில் பயணித்த பயிற்றுநர் மற்றும் பயிற்சி விமானி என இரண்டு பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த விமான பயிற்றுநரான சச்சின் பாட்டியா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த பயிற்சி விமானி அபிஷேக் பூஜாரி உயிரிழந்துள்ளதாக கான்பூர் காவல் ஆணையர் ரகுவீர் லால் தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து காவல் ஆணையர் ரகுவீர் லால் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த டெக்னாம் விமானம் 2023-ஆம் ஆண்டில் பயிற்சிக்காக இங்கு கொண்டுவரப்பட்டது. விபத்தில் விமானத்தின் பயிற்றுநர் மற்றும் பயிற்சி விமானி ஆகிய இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
பயிற்றுவிப்பாளர் மற்றும் பயிற்சி விமானி இருவரும் இங்குள்ள கார்க் விமானப் பயிற்சி மையத்திலிருந்து காலை 11:30 மணிக்கு புறப்பட்டனர். அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, காலை 11:50 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்த விமானம் நான்கு இருக்கைகள் கொண்ட, இரட்டை என்ஜின் டெக்னாம் விமானமாக இருந்தது. விமானத்தின் ஓட்டுநர் பாட்டியாவுக்கு 3,000 மணிநேரம் மட்டுமே ஓட்டுநர் அனுபவம் இருந்தது.
இந்த விபத்து குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (DGCA) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் குழு இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தும்.
விபத்து ஏற்பட்ட பகுதியை பாதுகாப்பதற்காக காவல்துறையினர் முழுப் பகுதியையும் சுற்றி வளைத்துள்ளனர். சம்பவ இடத்திலிருந்து உடல்கள் அகற்றப்பட்டுள்ளன,” என்றும் லால் கூறினார்.