அசாம் மாநிலத்தின் ஹைலாகண்டி மாவட்டத்தில் கனமழை காரணமாக ரெயில் தண்டவாள பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால், மிசோரம் மாநிலம் பைராபிக்கு செல்லும் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வியாழக்கிழமை மாலை பெய்த இடைவிடாத மழையை தொடர்ந்து, அசாம்-மிசோரம் எல்லை பகுதியில் உள்ள ஜமீரா மற்றும் பைராபிக்கு இடையேயான ரெயில் தண்டவாளத்தின் சுமார் 50 மீட்டர் பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டது.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட பகுதி வழியாக ரெயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வடகிழக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
தேவையான உபகரணங்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் தொழிலாளர்களுடன் பாதிக்கப்பட்ட இடத்திற்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளன.
ரெயில்வே ஊழியர்கள் சீரமைப்பு பணிகளை தொடங்கியுள்ளனர், மேலும் தண்டவாளத்தை விரைவில் சீரமைப்பதற்காக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
வியாழக்கிழமை இயக்கப்பட்ட சில்சார்-பைராபி பயணிகள் ரெயில், ஜமீராவில் தனது பயணத்தை நிறைவு செய்தது. அந்த ரெயில் இன்று ஜமீராவில் இருந்து தனது திரும்பும் பயணத்தை தொடங்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. பைராபி நோக்கி பயணிக்கும் பயணிகளுக்காக மாற்று சாலை போக்குவரத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கவுகாத்தி-சைராங் ரெயில் ஹைலாகண்டியில் தனது சேவையை நிறுத்திக்கொண்டது. மேலும், ஹைலாகண்டிக்கும் சைராங்கிற்கும் இடையிலான அதன் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று இயக்கப்பட இருந்த பைராபி-சில்சார், சைராங்-கொல்கத்தா மற்றும் சில்சார்-சைராங் ரெயில்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சிக்கித் தவிக்கும் பயணிகளுக்காக, வடகிழக்கு ரெயில்வே ஜமீரா, பைராபி மற்றும் சாய்ரங் நிலையங்களில் குடிநீர் மற்றும் சிற்றுண்டிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. மேலும், பயணிகளுக்கு ரெயில் சேவைகள் குறித்த தகவல்கள், பயணச்சீட்டு தொடர்பான உதவிகள் மற்றும் பிற அத்தியாவசிய ஆதரவை வழங்குவதற்காக கவுகாத்தி, லும்டிங், நஹர்லாகுன், படர்பூர் மற்றும் சாய்ரங் நிலையங்களில் சிறப்பு உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
வடகிழக்கு ரெயில்வே நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. ஹைலாகண்டி மாவட்டத்தின் ஜமீரா-பைராபி பிரிவில் சேதமடைந்த ரெயில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. ரெயில் சேவைகளை விரைவில் மீட்டெடுக்க ரெயில்வே துறை செயல்பட்டு வருகிறது.